தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா (25) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார்.
அங்கு நணபருடன் பழகி காதலாக மாற கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவர் ரோகித்துடன் அவர் மடிவாளா அருகே வெங்கடபுரா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரோகித் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சரண்யாவிடம் தகராறு செய்து, அவரை அடித்து, உதைத்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சரண்யா தனது பெற்றோரிடம் கூறி அழ, அவர்கள் சரண்யாவை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சரண்யா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரண்யாவின் பெற்றோருக்கும், மடிவாளா போலீசாருக்கும் ரோகித் தகவல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரோகித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.