திருமணமாகி 45 நாட்களில் புதுப்பெண் கொலை!.. குற்றவாளிகளின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

332

தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த சனியன்று மோனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மோனிகாவை தாக்கிவிட்டு கழுத்தை அறுத்துக் கொன்றதுடன் தாலி மற்றும் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த பொலிசார் அதிகாரிகள் சடலத்தை மீட்டுவிட்டு விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் கொலை செய்தவர்களின் விபரம் தெரியவந்தது.


இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் பொலிசார் திருத்தங்கல் – ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (20), டைசன் என்கின்ற சேகர் (19) ஆகியோர் சிக்கினர்.

இவர்கள் இருவரும் புதுப்பெண் மோனிகாவை கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்த பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த தங்களுக்கு செலவுக்கு போதிய பணம் இல்லாததால் நகைக்காக வீடு புகுந்து புதுப்பெண் மோனிகாவை கழுத்தை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த கொலை தொடர்பாக கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரிக்கும் (40) தெரியும் என்று விசாரணையின் போது, கைதான 2 பேரும் பொலிசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து போலீசார் பரமேஸ்வரியையும் கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டிலிருந்து அரிவாள் மற்றும் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.