தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்று மயானத்தில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி.
இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் கணேசன் இறந்துவிட, சரோஜா மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ் மற்றும் அருண்குமார், சரோஜாவிடம் பணம் கேட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த ரூ.2 ஆயிரத்தை தருமாறு கேட்டுள்ளனர், அதை செலவு செய்து விட்டதாக சரோஜா கூறவே சரோஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
கோபத்தில் இரும்பு கம்பியை கொண்டு சரோஜாவை தாக்க வலியால் கதறி துடித்துள்ளார், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் உஷாரான மகன்கள் தனியார் ஆம்புலன்ஸ்க்கு போன்று செய்து சரோஜாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த விவரம் பொலிசுக்கு தெரியவே, விசாரணை நடத்தத் தொடங்கினர், அப்போது சூரம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி இருவர் நிற்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று விசாரித்ததில், மகன்கள் தாக்கியதால் உயிரிழந்த சரோஜாவை யாருக்கும் தெரியாமல் புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஈரோடு தாசில்தார் முன்னிலையில் சரோஜாவின் சடலத்தை தோண்டியெடுத்த பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகன்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.