இளம்பெண்ணின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி… கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது!!

147

பெற்றோர்கள் கதறித் துடித்தனர். காதலிச்சவனையே பொண்ணு ஆசைப்பட்டாள்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சேனேன்னு கதறியது காண்போரைக் கரைய செய்தது. மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் விலா எலும்பு நொறுங்கியதும், காயங்கள் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், அடித்துத் துன்புறுத்தி கொலைச் செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி நிலாபர் நிஷா. தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், யாஷிகா பர்வீன் (22) என்பவருக்கும், உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், ஜபருல்லா தம்பதியின் மகன் இம்ரானுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை துன்புறுத்துவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், ஜூன் 24ம் தேதி, யாஷிகா பர்வீனுக்கு வலிப்பு ஏற்பட்டு, சமையல் அறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் கிடைத்தது.பின்னர் அவர் உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு யாஷிகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் வந்தது. பெண்ணின் கழுத்து, தோள்பட்டை மற்றும் விலா எலும்பு நொறுங்கி காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து யாஷிகா பர்வீனின் மாமியார் யாஸ்மின் (49), அவரது மாமனார் கலிப் (56), அவரது கணவர் இம்ரான் (30), அவரது கணவரின் தம்பி முக்தர் (23) ஆகிய 4 பேரை உதகை டி3 காவல் துறையினர் கைது செய்தனர்.


அதில், யாஷிகாவை தொடர்ந்து தாக்கி துன்புறுத்திய இந்த நான்கு பேரும் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.