‘என் கழுத்தைத் தொட்டு முடியை விலக்கி…’ இயக்குனர் ரஞ்சித் மீது நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார்!!

197

பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தற்போதைய தலைவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெங்காலி நடிகை குற்றம் சாட்டினார்.

“ஷியாமபரசாத்தின் ‘அகலே’ படத்தில் நான் ஒரு வேடத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு இயக்குநர் ரஞ்சித் என்னை ‘பலேரி மாணிக்யம்’ படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். அதன் பின்னர் நான் ஆடிஷனில் கலந்து கொண்டேன். தயாரிப்பாளர் ஏற்பாடு செய்த டீம் பார்ட்டிக்கு அழைக்கப்பட்டேன்.

பார்ட்டியில் இயக்குநர் ரஞ்சித் என்னை ஹோட்டலில் உள்ள தனது அறைக்கு வரச் சொன்னார். இது திரைப்படத்தைப் பற்றி விவாதிப்பதற்காக என்று நான் நினைத்தேன், ஆனால் அவருக்கு வேறு உள்நோக்கம் இருந்துள்ளது.

அவர் முதலில் என் வளையல்களைத் தொட்டார், பின்னர் அவரது கைகள் என் கழுத்தையும் தோளையும் தடவி முடியை விலக்கியது. அது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

உடனடியாக நான் அறையை விட்டு வெளியேறினேன். அந்த இரவு முழுவதும் பயத்துடன் ஹோட்டல் அறையில் தங்க வேண்டியிருந்தது. பின்னர், நான் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்தேன். அதன்பிறகு எனக்கு மலையாளப் படத்திலிருந்து வேலை கிடைக்கவில்லை.

ஆவணப்பட இயக்குனர் ஜோஷி ஜோசப்பிடம் நடந்த பயங்கரமான சம்பவங்களை நான் உடனடியாக வெளிப்படுத்தினேன். வன்முறையை எதிர்கொண்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் ஸ்ரீலேகா கோரிக்கை விடுத்துள்ளார்.


இருப்பினும் இந்த குற்றச்சாட்டை இயக்குநர் ரஞ்சித் மறுத்தார். ஆனால் ஸ்ரீலேகா உண்மையில் ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக கருதப்படவில்லை என்பதை இயக்குநர் ரஞ்சித் ஏற்றுக்கொண்டார்.