ஒரு வயதில் மாயமான தாயார்… 22ம் வயதில் கண்டுபிடித்த இளைஞர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

515

அஸ்வின்…..

இந்திய மாநிலம் கேரளாவில் பிறந்து ஓராண்டில் மாயமான தாயாரை, கடும் போராட்டங்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியை சேர்ந்த 22 வயதான அஸ்வின் என்பவரே தனியொருவராக போராடி தமது தாயாரை கண்டு பிடித்துள்ளார். அஸ்வின் பிறந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தந்தையும் தாயாரும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தனித்தனியாக பிரிந்துள்ளனர். தொடர்ந்து அஸ்வினின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் தந்தை வழி பாட்டியான விசாலாட்சி என்பவரே, அஸ்வினை அதன் பின்னர் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் 16ம் வயதில் தமது பாட்டியை இழந்துள்ளார் அஸ்வின். பாட்டியின் மறைவுக்கு பின்னர் மொத்தமாக ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்ற அஸ்வின் 12ம் வகுப்பில் இணைந்த நிலையிலேயே பாட்டி மரணமடைந்துள்ளார். இதனிடையே ஒரு மேஜிக் நிபுணராக வேண்டும் என்ற ஆசை தலைக்கேற, கேரளாவின் பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடு என்பவரின் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் அஸ்வினின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.

கோபிநாத் முதுகாடின் நிறுவனத்தில் வாய்ப்பு தேடிச்சென்ற அவருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நம்பிக்கை இழக்காத அஸ்வின், திருவனந்தபுரம் நகரிலேயே தங்கியிருந்து, பிழைப்புக்காக காலியான பீர் போத்தல்களை சேகரித்து விற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் 2016ல் முதுகாடு நிறுவனத்தில் இருந்து அஸ்வினுக்கு, அவரது வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் அந்த அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து தாயாரை தேடும் பணியில் இறங்கியுள்ளார் அஸ்வின்.

இதனிடையே ஒரு அகதிகள் முகாமில் 44 வயதான லதா தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தாயாரை நேரடியாக சந்தித்தும் தம்மை அவர் உருக்காணவில்லை என்றே அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும், எஞ்சிய நாட்கள் தாயாருடன் வாழவும், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.