கல்லீரல் தானம் கொடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

6

கல்லீரல் தானம் கொடுத்த இளம்பெண் திடீரென மரணமடைந்துள்ளது உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருபவர் அர்ச்சனா காமத் (33).

இவர், மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்பிஏ கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் சேத்தன் குமார். இந்த தம்பதியருக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

இவரது கணவரின் உறவினர் பெண்ணுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. கணவர் குடும்பத்தினரின் ரத்த பிரிவு பொருந்தாததால், அவர்களால் கல்லீரல் தானம் தர முடியவில்லை.

ஆனால், அர்ச்சனாவின் ரத்த பிரிவு அவருக்குப் பொருந்திய நிலையில், தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய அர்ச்சனா ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அர்ச்சனாவின் கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டு, உறவுக்கார பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.


கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டாலும், அது மீண்டும் முழுதாக வளர்ந்து விடும். அதேபோல, தானம் பெறுபவருக்கு பொருத்தப்படும் கல்லீரலும் முழுதாக வளர்ந்து விடும்.

அறுவை சிகிச்சைக்கு பின் அர்ச்சனா, மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வெடுத்தார். அதன்பின், மங்களூரு கரங்கல்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். வீடு திரும்பிய சில நாட்களில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து, மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கல்லீரல் தானம் பெற்ற பெண் நலமாக உள்ளார்.