சென்னை…
சென்னை திருவொற்றியூரில் கூலித் தொழிலாளி துரை (56)- அவரது மனைவி இந்திராணி (48) தம்பதி வசித்து வந்தனர். இதில் இந்திராணி தேரடி சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். ஆனால், துரை மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச்செல்லாமல் ஊர் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை மனைவி கண்டித்து, வேலைக்குச் செல்ல அறிவுறுத்தினாராம். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடிகுடும்பச் சண்டை தொடர்ந்தது.
இந்நிலையில்,நேற்று காலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் துரை, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து சரிந்துவிழுந்த இந்திராணி அதே இடத்தில் இறந்தார்.
ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்த போலீசார் இந்திராணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மனைவியை கொலைசெய்த துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலைக்கு போகவேண்டும் என கூறியதால் மனைவியை கணவர் அடித்துகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.