மாமியாரை கத்தியால் குத்திய மருமகள் : நடந்த விபரீதம்!!

202

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (33) என்பவரை பல வருடம் முன்பு காதலித்துள்ளார். இதில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் சம்மதமின்றி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில், புருஷோத்தமனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அவ்வப்போது தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மீண்டும் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆவேசமடைந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மனைவி அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கும் அவரது மாமியார் கொள்ளாபுரி (63) என்பவருக்கும் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி, மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் அறுத்துவிட்டாராம்.

இதனால் அலறி துடித்த கொள்ளாபுரியை அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர், இதுதொடர்பாக கொள்ளாபுரி அவளூர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருமகள் ஜெகதீஸ்வரியை கைது செய்தனர். பின்னர் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகதீஸ்வரி விடுவிக்கப்பட்டார்.