4 கல்யாணம் 60 லட்சம் சுருட்டல்: ஒரு கிராமத்தையே அலற விட்ட இளம்பெண்!!

361

செளமியா…

அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் வரை மோசடி செய்து சமூக வலைதளங்கள் மூலம் நான்கு திருமணங்கள் செய்த பெண் குற்றப்பிரிவு போலீசாரால் சேலத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரத்தில் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயலை சேர்ந்தவர் விஜய். இவரது உறவினரான சுரேஷ் மணிமுத்தாறு பகுதியில் போலீசாக உள்ளார். 2019-ம் ஆண்டு இவருக்கும் செளமியா என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சௌமியா 6 மாதங்களுக்கு முன் குடும்பத் தேவைக்காக உறவினரான விஜய் என்பவரிடம் 13 பவுன் நகை மற்றும் பணம் பெற்றுள்ளார்.

அப்போதைய கரூரைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் தனது தாய்மாமா என்று கூறி அவர் மூலம் விஜய் தம்பி தனுசுக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக 75 ரூபாய் பணமும் மற்றொரு தம்பி விஸ்வா பெரியம்மா மகன் பாலமுருகன் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக தலா 2.75 லட்சம் என பெற்றுள்ளார்.


இதேபோல் சிறுவயல் பகுதியைச் சார்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தாரிடம் 60 பவுன் நகை மற்றும் 30 லட்சம் பணம் என 60 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளார். இதற்கு சிறுவயல் பகுதியைச் சார்ந்த சதீஸ் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுவயல் பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்தும் விஜய் அளித்த புகாரின் பேரில் பிப்ரவரி 12ஆம் தேதி சௌமியா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து விசாரணை செய்ததில் கரூர் பகுதியைச் சார்ந்த சௌமியா ஏற்கனவே அரியலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை திருமணம் செய்துள்ளதாகவும், அதைத்தொடர்ந்து மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர் சுரேஷ் என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

வழக்கு பதியப்பட்டது தெரியவந்ததால் தப்பிய சௌமியா ஜூன் மாதம் 21ஆம் தேதி சீனிவாசன் என்ற லேப் டெக்னீசியன் வேலை பார்த்து வந்த வரை சேலத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கிறார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சௌமியா கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கார்த்திக் முன்னிலையில் ஆஜர் செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மூன்றாவது திருமணம் செய்த சிறுவயலை சொந்த ஊராகக் கொண்ட சுரேஷ் உறவினர்களிடம் குடும்பத்தோடு நல்ல உறவினர் போல் நடித்து சிறுவயல் கிராமத்தில் உள்ள ஏழை எளியவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலீஸ்காரர் சுரேஷின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை செய்து அந்தப் பணத்தையும் நகைகளையும் சௌமியா சுருட்டிக்கொண்டு கரூர் பகுதிக்கு தப்பிச் சென்றதாக தெரியவந்தது.

தொடர்ந்து சுரேஷின் உறவினர் தம்பி சதீஷ் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் செய்த விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உறவினருடன் தொடர் பேசியில் தொடர்பு கொண்டு பணம் பெற்றதும் அதற்கு கணவன் சுரேஷின் வங்கிக் கணக்கை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இந்த மோசடி வழக்கில் குற்றவாளியாக சௌமியா அவரது கணவர் சுரேஷ், சுரேஷின் உறவினர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து சௌமியா மற்றும் சதீஸை கைது செய்தனர்.

சுரேஷின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இளமையை பயன்படுத்தி பல ஆண்களுடன் பணத்திற்காக உல்லாசமாக இருந்த பெண் தற்போது கைது செய்து சிறையில் இருக்கிறார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.