ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞரின் கொடுஞ்செயல்… சகோதரி மரணம்: உயிருக்கு போராடும் பெற்றோர்!!

413

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞர் ஒருவர் தமது மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி 16 வயது ஆன்மேரி என்பவர் சகோதரர் ஆல்பின் பென்னி வாங்கித் தந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மட்டுமின்றி, 22 வயதான ஆல்பின் பென்னியின் பெற்றோரும் அதே ஐஸ் கிரீம் சாப்பிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், ஆன்மேரி மரணம் தொடர்பில் விரிவான அறிக்கை பொலிசாருக்கு கிடைத்துள்ளது.


அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ் கிரீமில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆல்பின் பென்னியை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்திய பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தமது பணத் தேவைக்காக பெற்றோர் சகோதரி உள்ளிட்ட அனைவரையும் கொலை செய்துவிட்டு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்தையும் விற்பதே இலக்காக இருந்ததாக ஆல்பின் பென்னி பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

தற்போது விசாரணை கைதியாக ஆல்பின் பென்னி பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.