காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

329

மாடசாமி..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து மூன்று மாதத்தில் புது மாப்பிள்ளை குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் தாலுகா போலீசார் அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேன்ராஜ் மகன் மாடசாமி(23). அதே பகுதியை சேர்ந்த அழகுமுத்து மகள் காளீஸ்வரி(18) இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமங்கலம் அருகே சித்தாலை அடுத்த குருவனந்தபுரம் பகுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காளீஸ்வரி தந்தை அழகுமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாடசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்பு சிறையில் இருந்து வந்துள்ளார்.


இதனை தொடர்ந்து சிறையில் வெளியே வந்த மாடசாமி, காளீஸ்வரியை அழைத்துக்கொண்டு குருவனந்தபுரம் கிராமத்தில் குடியேறியுள்ளார். மேலும் சித்தாலை பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்துள்ளார். மாடசாமி அடிக்கடி மது பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு மனைவி காளீஸ்வரி வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மாடசாமி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.