மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சோகம்… இந்தியர்களும் வெளிநாடுகளில் தொடரும் அவலம்!!

164

மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் உயிரிழந்தனர்.

கடந்த 7ம் தேதி தீ விபத்து நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிராம்ப்டன் பகுதியில் உள்ள பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைவ் பகுதியில் இந்திய வம்சாவளி குடும்பம் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டது. இறந்தவர்கள் ராஜீவ் வாரிகோ (51), அவரது மனைவி ஷில்பா கோத்தா (47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராஜீவ் ஒன்டோரியோ அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்றோம். விபத்தில் இறந்தவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.


தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு 3 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, இது சந்தேகத்திற்கிடமான விபத்து என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் அறிக்கையில், “எங்கள் கொலை விசாரணை பிரிவு மூலம் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். ஒன்டோரியோ தீயணைப்பு துறையினர் இந்த தீ விபத்து தற்செயலானதல்ல என கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த விபத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுகிறோம்” என்று தெரிவித்தனர்.