அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

137

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில், தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்,

தற்போது நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி எலிசபெத் ராணியை பிரவசத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிப்ரவரி 27ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் எலிசபெத் ராணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்கு எலிசபெத் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென வழுக்கி கீழே விழுந்துவிட்டார்.

இதில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்த அவரைக் கண்ட தாய் ஜெயாவதி உடனடியாக அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.


இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த எலிசபெத் ராணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீசாரும், மருத்துவத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த எலிசபெத் ராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் கழிப்பறையில் வழுக்கி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த பெண் வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மயங்கி இறந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.