இந்தியாவில் செல்போனை திருடியதாக இளம்பெண்ணை பொலிசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நீஷு (22). இவர் வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த பொலிசார் நிஷு செல்போனை திருடியதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் கூறி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான் பொலிசார் நிஷுவை விடுவித்தனர். வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நிஷுவின் தாயார் கூறுகையில், பொலிசார் காவல் நிலையத்துக்கு என் மகளை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
நாங்கள் எவ்வளவு கூறியும் விடுவிக்கவில்லை, பின்னர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பின்னரே விடுவித்தனர்.
நிஷு மீது எந்த தவறும் இல்லை, பொலிசாரின் துன்புறுத்தல் காரணமாக அவமானம் அடைந்து மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் சம்மந்தப்பட்ட பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.