‘என்னையும் என் கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்க’ என்று தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஆக்ராவில் ராணுவ அதிகாரி ரேணு தன்வார் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதே நாளில் டெல்லியில் இருந்த ரேணுவின் கணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் ரேணு தன்வார். இவரது கணவரும் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் தனது கணவர் தீன்தயாள் தீப் தற்கொலைச் செய்துக் கொண்டதாக தகவல் தெரிந்த நிலையில், ஆக்ராவில் பணியில் இருந்த ரேணு, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
அதற்கு முன்பாக உருக்கமாக, தனது கணவருடன் சேர்த்து தன்னையும் தகனம் செய்யும் படி கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த தகவலின்படி, விமானப்படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப்பும், அவரது மனைவி ராணுவ அதிகாரி ரேணு தன்வாரும் கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டனர்.
இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் டெல்லியில் உள்ள விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு, டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள விமானப்படை சிறப்பு பிரிவு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
ஆக்ராவில் இராணுவத்தில் பணியில் இருந்தார் ரேணு. ஆக்ராவில் தனது சகோதரருடன் தாயாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரது கணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட செய்தி கிடைத்துள்ளது. கணவர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது மனைவி ரேணு, தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு திரும்பி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விருந்தினர் மாளிகைக்கு விரைந்த போலீசார் ரேணு தன்வாரின் உடலை மீட்டனர். மேலும் அவர் எழுதியிருந்த தற்கொலைக்கு முன்பான கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில் ரேணு தன்வார் ’என்னை என் கணவருடன் கைகோர்த்து தகனம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மறுபுறம், தீன்தயாள் தீப் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுப்பிடிக்க போலீசாருக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.