காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் : மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு!!

362

புதுச்சேரி…

புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கெளரி (48). இவரது மகள் ரோஜா (29). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கணவர் விபத்தில் சிக்கி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து, ரோஜா தனது தாயுடன் திருப்பூர் சென்று அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்தார். அப்போது அவருடன் வேலை செய்த கோவையைச் சேர்ந்த விக்னேஷ் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் கோவையில் கணவர் வீட்டில் குடும்பம் நடத்திய நிலையில், சமீபகாலமாக தம்பதியிடையே குடும்ப சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.


இதையடுத்து தனது கணவரிடம் கோபித்துக் கொண்ட ரோஜா, குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு புதுச்சேரி வந்து தாயுடன் உருளையன்பேட்டை முல்லை நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து புதுச்சேரி வந்த விக்னேஷ், தனது மனைவியைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ரோஜாவிடம் தன்னுடன் குடும்பம் நடத்த கோவைக்கு வருமாறு அழைத்ததாக தெரிகிறது.

அதற்கு அவர் மறுக்கவே தம்பதியிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிந்தார். இதன் பின், விக்னேஷும் தன்னைத் தானே கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ரோஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.