கிருஷ்ணகிரி…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வயதான தனது மகனை குடிபோதையில் கழுத்தில் மிதித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தனது மனைவியையும் தானே கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மகனை சந்தோஷ் தனது கட்டுப்பாட்டில் வளர்த்து வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ், நேற்று மாலை மாமனார் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். அப்போது மாமனார் சந்தோஷை அடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்த தனது மகனை காலால் மிதித்து கொன்றுள்ளார்.
தகவலறிந்து சென்ற அக்கம் பக்கத்தினர், உடனடியாக சூளகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தோஷை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாமனார் மீது இருந்த கோபத்தில் மகனை கொன்றதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி கிணற்றில் தவறி விழுந்து இறக்கவில்லை. தான் தான் அவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.