நீலகிரியில் கனமழை மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு!!

20

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கன மழையில் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். இதில் மண்ணில் புதைந்து ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்றிரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையில் திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் மண்சரிவில் சிக்கி கொண்டார். வீட்டிற்குள் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரும், அப்பகுதி மக்களும் சேர்ந்து வீட்டிற்குள் சிக்கி கொண்ட மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர்.

எனினும் மண்ணுக்குள் சிக்கிய ஜெயலட்சுமியை 3 மணி நேரம் போராடி மீட்ட நிலையில், சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர், வருவாய்துறையினர், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.