புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தனர்.
மற்றொருவர் பல்வேறு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மற்ற இருவரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டது ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி தெஸ்தான் என்பவரின் மகன் ரிஷி,
திடீர் நகரைச் சேர்ந்த தேவா மற்றும் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.