விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!

69

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள் 11 வயது கவிபாலா.

இவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.

உடனே மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்த மாணவி கவிபாலாவை பார்த்த அதிர்ச்சியில் அதே பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் புக்கரம்பை கிராமத்தில் வசித்து வரும் சக்திவேல் மகள் 14 வயது தியா.

இவர் ஆண்டிக்காடு கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பன் மகள் 15 வயது சகாயமேரி. இவர்கள் இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர்.

உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் பள்ளத்தூர் அருகில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்த சமயத்தில் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்த மாணவி கவிபாலாவை உடனே மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.


பணியிலிருந்த மருத்துவர்கள் மாணவி கவிபாலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மருத்துவமனைக்கு வந்த மாணவி கவிபாலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி கவிர்பாலாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அழகியநாயகியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் இருந்துவரும் மாணவிகள் தியா மற்றும் சகாயமேரி இருவரையும் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் நேரில் சந்தித்து மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ அசோக்குமார் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.

இன்று பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் மாணவி கவிபாலா உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.