உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா? போலீசாரை மிரட்டி கிண்டல் செய்த ஜோடி!!

32

சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபத்து தெரியாமல் இரவு நேரங்களில் மெரினா கடற்கரைக்கு செல்லும் நபர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல் துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுக்குமாறு அங்கிருந்த ஜோடியிடம் கூறியுள்ளனர். ஆனால், காரை எடுக்காத அந்த ஜோடி, ரோந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த பெண் எத்தனை முறை வீடியோ எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், அருகில் இருந்த ஆண் காவல் துறையினரை ஒருமையில் வசைபாட ஆரம்பித்தார். யார் சார் நீங்க என போலீசார் கேட்க, அவர்களை கிண்டல் செய்யும் தொணியில் சைகைகளை செய்தனர்.


அத்துடன், நன்றாக வீடியோ எடுங்கள் என இருவரும் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். காவல் துறையினரை வையாபுரி மூஞ்சி என்றும், பல்லி மூஞ்சி என்றும் கேலி செய்தனர்.

மேலும், அந்த ஆண், எங்களை அரெஸ்ட் செய்ய போறீங்களா? முடிஞ்சா பண்ணுங்கடா பாப்போம் என்றும், நாளை காலை உங்க அட்ரெஸ் எல்லாத்தையும் கண்டுபிடுச்சி உங்களை காலி செய்து விடுவேன் என்றெல்லாம் போலீசாரை மிரட்டினார்.

நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறேயா? என்றெல்லாம் சவால் விடுத்தார்.

மேலும், தான் குடித்துதான் இருக்கிறேன் என்றும் தன்னால் வண்டியை எடுக்க முடியாது என்றெல்லாம் பேசினார். ஒரு கட்டத்தில் காரை எடுத்து வட்டமடித்தபடி அந்த பெண்ணுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வைரலாக பரவி வருகிறது. ஜோடி இருவரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசாருடன் வாக்குவாதம் செய்த அந்த ஜோடி யார் என்பது தொடர்பாகவும், அவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மெரினாவில் காவல் துறையினருடன் ஜோடி வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.