உனக்கு 22, எனக்கு 21.. கல் நெஞ்சையும் கரைக்கும் காதல் தம்பதிகளின் அடுத்தடுத்த மரணம்!!

119

சேலம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த காதல் கணவரும் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 22 வயதாகும் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் பாஸ்ட் புட் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அவரை கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஓராண்டாக நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் வீசியது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சல் அடைந்த பூபாலன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேகலாவிடம் டாக்டர்கள் தெரிவித்தார்களாம். இதை கேட்டதும் கணவரை அருகில் இருந்து கவனித்து வந்த மேகலா திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார்.

அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது பழைய புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே உள்ள ஒரு மரத்தில் மேகலா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


விஷம் குடித்த பூபாலன் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் மேகலாவிடம் தெரிவித்ததால் தான் மேகலா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி உறவினர்கள் , கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

இதற்கிடையே சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த பூபாலன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கேட்டவுடன் பூபாலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள்.

காதல் கணவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.

உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.