கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை வெளிநாட்டு காதலனுடன் திட்டம் தீட்டி போட்டு தள்ளிய மனைவி!!

429

கடலூரில்..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன் (45). இவர் வாட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவருடன் நாகலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இவர்களின் உறவு 3 ஆண்டுகளாக தொடர்ந்தது. இவர்களது விவகாரம் கணவருக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் குடும்பத்துடன் சிதம்பரம் சென்றார். இதற்கிடையில், தங்க பாண்டியன் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தினமும் நாகலட்சுமியிடம் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார்.

இவர்களது பழக்கம் தொடர்வதை அறிந்த மாமல்லன் தனது மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் நாகலட்சுமி இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாமல்லன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாமல்லனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனிடையே, மாமல்லனின் அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மனைவி நாகலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்களுடைய பாணியில் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனைக் கொல்ல வேண்டும் என்று தங்கப்பாண்டியனும் நாகலட்சுமியும் திட்டம் போட்டுள்ளனர். இதையடுத்து தங்கபாண்டியன் தனது நண்பர்களான சட்டக்கல்லூரி மாணவர் ராஜகுரு, மெக்கானிக் இளவேந்தன் ஆகியோருடன் சேர்ந்து மாமல்லனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து நாகலட்சுமி, ராஜகுரு, இளவேந்தன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.