கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை காரை ஏற்றி கொன்ற மனைவி : திடுக்கிடும் தகவல்!!

472

கடலூர்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபைநகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி. இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இந்த கள்ளக்காதலுக்கு கிரண்ரூபினியின் கணவர் சம்பத் இடையூறாக இருந்ததால் கிரண்ரூபினியும், அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் என்பவரும் சேர்ந்து கார் ஓட்டுநரான அமீர்பாஷா என்பவர் உதவியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கனகசபைநகர் பகுதியில் சம்பத்தை காரை ஏற்றி கொலை செய்து, அதை விபத்தாக மாற்ற செய்தனர். முதலில் விபத்தாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் நகர போலீசார் கிரண்ரூபினி, அவரது கள்ளக்காதலன் ராஜேஷ், கார் ஓட்டுநர் அமீர்பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதைத்தொடர்ந்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் ஒரு சில முறை மட்டுமே ஆஜரான குற்றவாளிகள் அதன் பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தவர்களை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்தார்.

இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம், மங்கலம்பேட்டை, சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் ராஜேஷ், கிரண்ரூபினி ஆகிய இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் கிரண்ரூபினி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.