காதலித்து ஒன்றாக ஊர்சுற்றி வந்த நிலையில், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த காதலியை தாக்கி,
கிணற்றில் தள்ளி கொலைச் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் காதலனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தைs சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி (21).
கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக தனியார் பயிற்சி மையம் ஒன்றில் ரோஷினி படித்து வந்துள்ளார்.
ரோஷினி படித்து வந்த அதே பயிற்சி மையத்தில் அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் சக்திவேல்(29) என்பவரும் படித்து வருகிறார்.
ஒரே பயிற்சி மையத்தில் படித்து வந்த இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் பயிற்சி மையத்தில் இருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு பேசிக்கொண்டே நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது பாடகம்-மன்சூராபாத் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை சரமாரி தாக்கியுள்ளார். மேலும் அருகே உள்ள கிணற்றில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சக்திவேல் நள்ளிரவு போளூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர் போலீசாரிடம் ‘நானும், ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.
இதனால் நான் ரோஷினியிடம் உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினேன். ஆனால் ரோஷினி திருமணம் செய்துக் கொள்வதற்கு மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான், அவரை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார்’ என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதி மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் மங்கலம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் மங்கலம் போலீசார் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ரோஷினி கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரோஷினியின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரோஷினியின் தலையில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளியிருக்கலாம். அல்லது அவரை தாக்கி, கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து போலீசார் ரோஷினியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.