காவலாளி மீது கொலைவெறித் தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

43

மாமல்லபுரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த தனியார் காவலாளியை நோ எண்ட்ரி பகுதியில் காரில் நுழைந்தவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாக சென்று காரை பார்க் செய்ய செய்ய முயன்றது.

அப்போது அங்கு பணியிலிருந்த தனியார் காவலாளி, நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது என்று கூறி காரை வழி மறித்து நின்றார்.

ஆனால் அவர் மீது ஏற்றுவது போல் சென்று நோ என்ட்ரி வழியா அந்த கார் செல்ல முயன்றது.

இதனால், காரில் வந்தவர்களை நோக்கி காவலாளி கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த பெண் காரில் இருந்து இறங்கி காவலாளியை தாக்க, அவருடன் இணைந்து காரில் இருந்த ஒரு பெண், 2 ஆண் என 4 பேரும் சேர்ந்து அந்த காவலாளியை கடுமையாக தாக்கினர்.


மேலும், காவலாளியிடம் இருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சூழலில் காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரென கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நோ என்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.