சாப்பிட கூப்பிட்ட தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்!!

82

சாப்பிட வருமாறு அழைத்த தாயை, கத்தியால் குத்திக் கொலைச் செய்த மகனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 52 வயது ஷைலஜா . இவருடைய மகன் 27 வயது ஆதில்.

இவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆதில் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று காலை ஷைலஜா தனது மகனை சாப்பிட வருமாறு அழைத்து உள்ளார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஆதில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஷைலஜா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஷைலஜாவை மீட்டு மாளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஷைலஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மனநலம் பாதித்த மகன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் ஆதிலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.