சோறு காலியானதால் தகராறு காவல் நிலையத்தில் நடைபெற்ற திருமணம்!!

8

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷாவில்  ராகுல் பிரமோத், அஞ்சலி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீடு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை மணமகள் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் ராகுல் போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

உடனடியாக மணமகளின் குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்யப்பட்ட நிலையில்  போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையிலேயே ராகுல் பிரமோத்துக்கும்,

அஞ்சலி குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.