திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். இவர் விவசாயம் செய்து வருகின்றனர். இவருடைய மனைவி ஹர்சிகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக ஹர்சிகா கர்ப்பமான நிலையில் அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மாதம் தோறும் சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஹர்சிகா பிரசவத்திற்காக கடந்த 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக உள்ளது. அதனால் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் அவர் அங்கிருந்து மேல் சிகச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து 20ம் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி மாலைஅறுவை சிகிச்சையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு கர்ப்பபையிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் கர்ப்பபையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.அதற்கு அவருடைய தாயாரிடம் கையெழுத்து வாங்கி கர்ப்பபையையும் அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி உறவினர்களை பார்க்க அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி மாலை ஹர்சிகா இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரிடம் உடனடியாக உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்தியுள்ளனார். பின்னர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியும் அனுப்பியுள்ளனர். மருத்துவர்களின் நெருக்கடியால் வீடு திரும்பிய உறவினர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
இதனையடுத்து ஹர்சிகா கணவர் பிரசாத் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தவறாக சிகிச்சை அளித்ததால் மனைவி உயிரிழந்ததாகவும், இதற்கு அரசு மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணம் என்றும் புகார் அளித்தனர். இதுக்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.