புதையலுக்காக 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: நள்ளிரவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!!

811

தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு மகன் குமரேசன்.

குமரேசனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர், மூன்றாவது குழந்தைக்கு 5 மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் பார்வதிக்கு ராஜன் என்ற போலிச் சாமியாருடன் நீண்ட கால தொடர்பு இருந்துள்ளது.

அடிக்கடி நள்ளிரவில் பார்வதி வீட்டில் பூஜைகளும் நடக்குமாம், இந்நிலையில் அவர்களது வீட்டில் புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறிய ராஜன், 2 லட்ச ரூபாய் தந்தால் புதையலை எடுத்து தருகிறேன் என கூறியுள்ளான்.

பார்வதியும் அந்த பணத்தை தந்துவிட, சம்பவதினத்தன்று பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவில் பூஜையும் தொடங்கியது.


அப்போது பூஜையின்போது பலி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட கருப்பு பூனை கடைசி சமயத்தில் தப்பியோடிவிட்டது.

எங்கு தேடியும் பூனை கிடைக்காததால் 5 மாத குழந்தையை பலி கொடுக்கலாம் என ராஜன் கூறியதாக தெரிகிறது. இதற்கு குமரேசன் ஒப்புக்கொள்ள, அவரது மனைவி சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதற்காக தீர்த்தம் எனக்கூறி மயக்க மருந்தினை கொடுக்க முயன்றுள்ளனர்.

இதில் உஷாரான குமரேசனின் மனைவி குழந்தையை தூக்கிக் கொண்டு தெருவில் வந்து கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர், விசாரணை நடந்து வருகிறது.