மகளைப் பார்க்க முடியாத ஏக்கம்… இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!

16

பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டது வேலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கருவுற்ற சுரோகவிற்கு கடந்த 23 ம் தேதி பிரவச வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்றிரவு சுரேகாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சுரேகா தனது இன்னொரு குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த சுரேகா நேற்று மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றுள்ளார்.


அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், படுகாயமடைந்த சுரேகாவை மீட்டு, அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தவமிருந்து பெற்ற குழந்தை பார்க்க முடியாத ஏக்கத்தில், 4 வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்படி திறக்கப்பட்டிருந்தது என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது.

பிரசவ வார்டில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுதாகியதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது என்றும் கூறினர்.

அப்போது சுரேகா நான்காவது மாடியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார் அவரோடு அவரது தாயும் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.