மதுபோதையில் தகராறு : கூட இருந்த நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்!!

27

நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது பணம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், கூட மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களே ஒன்று சேர்ந்து இளைஞரைக் கொலைச் செய்து புதைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (22). இவர் சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் தையூர் ஊராட்சியில் செங்கண்மால் பகுதியில் வடிவேலு என்பவருக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில் கடந்த 5 மாதமாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாலை 5 மணியளவில் கார் டிங்கரிங் கடையில் இருந்து கழிவறை செல்வதாக கூறி வெளியே சென்றவர் அதன் பின்னர் மீண்டும் கடைக்கு வரவில்லை.

கடை உரிமையாளர் வடிவேல் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து அப்துல் மஜித் கடைக்கு வராததால், சந்தேகமடைந்த வடிவேல், அப்துல் மஜித் காணவில்லை எனக் கூறி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் மஜித் குறித்து விசாரித்து வந்தனர்.

அப்துல் மஜித் செல்போன் எண்ணை வைத்து, கடைசியாக அவரை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்த போது, அப்துல் மஜித்திடம் பேசியவர்கள், தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று தொடர்புடைய 8 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.


போலீசாரின் விசாரணையில், தையூர் பகுதியை சேர்ந்த மோகன் (20), சகாயராஜ் (20), விமல்ராஜ் (20), ராகுல் (24), சேட்டு (23), ஸ்ரீகாந்த் (20), அபிலேஷ் (22), ரூபன் (18) என்பது தெரிந்தது.

அப்துல் மஜித்தை செல்போனில் தொடர்பு கொண்ட மேற்கண்ட நண்பர்கள், அவரை மது அருந்த அழைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அப்துல் மஜித்தும், அவரது நண்பர்கள் 8 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்

ஸ்ரீகாந்த் என்பவரிடம் வாங்கிய ரூ.10,000 பணத்தைத் திருப்பி கேட்ட போது ஏற்பட்ட வாய் தகராறில் அப்துல் மஜித் ஸ்ரீகாந்தின் தாயாரை ஆபசனமாக திட்டியதால், ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்துல் மஜீத்தை குடிபோதையில் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அப்துல் மஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் வேறு வழியின்றி கொலையை மறைக்க, தையூர்-கயார் சாலையில் உள்ள வனப் பகுதியில் குழிதோண்டி அப்துல் மஜித்தின் சடலத்தைப் புதைத்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கொலையில் சம்மந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளைப் போலீசார் வனப்பகுதிக்கு அழைத்து சென்று சடலத்தை புதைத்தை இடத்தை காண்பிக்க கூறினர்.

அவர்கள் காண்பித்த இடத்தில் திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட் ரமணன், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திக்கேயன், கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்த அப்துல் மஜித் தந்தை அபுதாஹிர் வரவழைக்கப்பட்டு அடையாளம் கேட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் அங்கயற்கண்ணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு சடலம் தோண்டிய இடத்திலேயே வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மேற்கண்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மோகன், சகாயராஜ், விமல்ராஜ் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.