மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் விபரீத முடிவு.. வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்!!

155

அண்ணாநகர் மேற்கு, 17வது பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பாலமுருகன் (57) என்ற மருத்துவர், மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார் (19), லிங்கேஷ்குமார் (16) ஆகியோருடன் வசித்து வந்தார்.

அண்ணாநகர் 13வது பிரதான சாலை மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பாலமுருகன், ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர்களது மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு தயாராகி வந்துள்ளார். இளையமகன் லிங்கேஷ்குமார் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி மருத்துவர், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்னர். அதில் மருத்துவர் பாலமுருகன் தொழிலை விரிவுபடுத்த 25க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.8 கோடி கடன் வாங்கி, அதில் ரூ.3 கோடியை திருப்பி செலுத்தி உள்ளார்.

மீதியுள்ள ரூ.5 கோடியை செலுத்த முடியாததால், பல்வேறு நபர்களிடம் இருந்து கந்துவட்டிக்கு ரூ.8 கோடி வாங்கிள்ளார்.


இதற்கு மாதம்தோறும் ரூ.25 லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார். ஆனாலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடனை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை செய்ததால்,

வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து, 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மருத்துவரின் வீட்டை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கியில் கடன் பெற்ற ஆவணங்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிய விவரங்கள் அடங்கிய டைரியை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியல் தயார் செய்து, அவர்களை தேடி வருகின்றனர். இதில், போலீசார் விசாரணைக்கு பயந்து, பலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைவானது தெரியவந்துள்ளது.

அவர்களை பிடிப்பதற்கு அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி கடன் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.