மர்மமாகும் பெண் ஆசிரியரின் நிலை.. உல்லாசமாக உலா வரும் ஆசிரியரை தீவிரமாக தேடி வரும் போலீசார்!!

146

பெரம்பலூரில்..

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆசிரியை தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த வெங்கடேசன் தீபாவிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால் தீபா பணத்தை ஆசிரியர் வெங்கடேசனிடமே திருப்பி கொடுத்துவிட்டு கோபமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதை வகுப்பறையிலிருந்த மாணவ – மாணவிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அன்று மாலை பள்ளி விட்டு தனது காரில் வீடு திரும்பிய ஆசிரியை தீபா மாயமாகியுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் மனைவியைக் காணவில்லை என்பதால் பாலமுருகன் தனது உறவினர்கள் மற்றும் தீபாவின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். தீபா மாயமான அதே நாளில் அவருடன் பணிபுரிந்து வந்த வெங்கடேசனும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து பாலமுருகன் தனது மனைவி தீபாவை காணவில்லை என வி-களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி தனது கணவரைக் காணவில்லை எனப் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே தீபாவின் கணவர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இயங்கும் CCTV கேமிரா பதிவுகளைச் சோதனை செய்துள்ளனர்.

அப்போது திருச்சி சமயபுரம் டோல், மற்றும் மதுரை, தேனி, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளில் தீபாவின் காரில் வெங்கடேசன் மட்டும் தனியாகப் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன கார் கோவை, உக்கடம் பகுதியில் 3 நாட்களாகக் கிடப்பதாகத் நிற்பதாக தீபாவின் கணவர் பாலமுருகனுக்குத் தகவல் வந்துள்ளது.

பின்னர் நேரில் சென்று பார்த்தபோது காரில் ரத்தக் கறைகள் படிந்து இருந்ததை பார்த்தனர். ஆனால் தீபாவோ அல்லது வெங்கடேசனோ காரில் இல்லை. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கோவையில் பதுங்கி இருந்தபோது ஆசிரியர் வெங்கடேசன் தனது செல்போனில் இருந்து தொடர்புகொண்ட பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரை சேர்ந்த மோகன் என்பவரை, பெரம்பலூர் அழைத்து வந்த வி.களத்தூர் போலீசார் நேற்று முன்தினம் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

போலீசார் தனது இருப்பிடத்தை அறிந்துவிடுவார்கள் என ஆசிரியர் வெங்கடேசன் அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றிமாற்றி வருவதால் போலீசார் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்களில் வெங்கடேசன் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே பதிவாகி உள்ளார்.