வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பரிதாபமாக பலி!!

3

பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தேர்வு எழுத சென்ற மாணவி, திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தேவபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், சாந்தி தம்பதிக்கு ஹரிணி (13) என்ற மகள் உள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஹரிணி 8ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் காரணமாக ஹரிணி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் கணித தேர்வு நடைபெற்றது. அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ஹரிணியின் தாய் சாந்தி, மாணவியை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வந்தார்.

பின்னர் மாணவி தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதன்பின், பள்ளி வாகனம் மூலம் அந்தியூரில் செயல்படும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த சிறுது நேரத்திலேயே மாணவி பரிதாபமாக இறந்தார். மாணவி இறந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் இருந்து இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனை சென்ற போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.