வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சடலமாக மீட்பு!!

13

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவரது மனைவி பிரியா. இவர்களின் 3 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஜெயப்பிரியாவை அவரது தாயார் தேடிக் கொண்டு வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெற்றோர் இருவரும் பல்வேறு பகுதிகளில் குழந்தையைத் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் தரணி- பிரியா புகார் அளித்தனர்.

இதனையடுத்து கடந்த 3 நாட்களாக காணாமல் போன குழந்தையை தேடி வந்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் பாழடைந்த கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன பெண் குழந்தை 3 நாட்களுக்குப் பின்பு கிணற்றில் சடலமாக மீட்டக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 வயது குழந்தை விளையாடும்போது தவறி வந்து கிணற்றில் விழுந்து விட்டாரா? அல்லது விரோதம் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.