13 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்து கொலை.. பாஜக தலைவர் கைது!!

112

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரைக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆதித்ய ராஜ் சைனி. 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது கூட்டாளியுடன் ஆதித்ய ராஜ் சைனியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதனை அடுத்து, ஆதித்ய ராஜ் சைனியை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹரித்துவாரில் வசிக்கும் 13 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர், ஆதித்ய ராஜ் சைனிக்கு எதிராக குற்றம் சாட்டியதோடு, காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சீட்டு கேட்டிருந்த ஆதித்ய ராஜ் சைனி, மாநில அளவில் செல்வாக்கு மிக்கவரும்கூட. கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் இவர் கைதாகி இருப்பது உத்தராகண்ட் பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன ஹரித்துவார் சிறுமியின் சடலம், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் அருகே பஹத்ராபாத் பகுதி நெடுஞ்சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை அடித்துக் கொல்வதற்கு முன்னர் பாஜகவின் ஆதித்ய ராஜ் சைனி தனது கூட்டாளியுடன் சேர்ந்து, கூட்டுப் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


சிறுமி வழக்கமான நேரத்தில் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்போனில் அழைத்துள்ளனர். அதை ஆதித்ய ராஜ் சைனி எடுத்து பேசியதோடு, சிறுமி தன்னுடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அதன் பின்னர் அந்த செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை, சிறுமி வேலைப் பார்க்கும் ஆதித்ய ராஜ் சைனியின் வீட்டிற்கு சிறுமியின் தாய் சென்றபோது, அங்கு தனது மகளைக் காணவில்லை எனக் கூறியிருக்கிறார்.

மகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப் போவதாக சிறுமியின் தாயார் கூறியதும், ஆதித்ய ராஜ் சைனியின் கொலை மிரட்டலுக்கும் ஆளாகி உள்ளார்.

சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, ஆதித்ய ராஜ் சைனி உட்பட இருவர் மீது போக்சோ மற்றும் கூட்டுப் பலாத்காரம், கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.