கேரளா..
கேரளாவில் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து, குழந்தையின் தாய் மகனுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் லீசா. அப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் கருவுற்ற லீசாவுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இந்தநிலையில், லீசா நேற்று தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது பால் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம் அடைந்தது.
பதறி அடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குழந்தை உயிர் பிரிந்ததால் லீசாவும் குடும்பமும் கதறி அழுது துடித்தனர். தாய் பாலால் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் மிகவும் மனமுடைந்த நிலையில் லீசா காணப்பட்டார்.
அந்த நேரத்தில் தாய் பால் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் குழந்தை இறந்திருக்காது என்று லீசா தனக்குத்தானே வருந்தி குற்ற உணர்ச்சியுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் லீசா தனது மூத்த மகனுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கட்டப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு தாய்பால் தான் மிகவும் ஊட்டச்சத்தாக உள்ளது.
ஒரு குழந்தை வளர வளர அவர்களது நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய் பால்தான் காரணம். தாய்ப்பாலை தவிர்க்க முடியாத விஷயமாக இருப்பதால் குழந்தைகளுக்கு எந்தெந்த நேரத்தில் எந்த அளவில் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதை அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.