மாமூல் தர மறுத்த இளைஞருக்கு 2K கிட்ஸால் நேர்ந்த கொடூர சம்பவம்!!

265

சென்னையில்..

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன் (33). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆயுதபூஜை அன்று, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் லோகேஷ் (எ) சிம்சன் (19), சந்தோஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன், ஹரிஹரனை சந்தித்தனர். ஆயுதபூஜை கொண்டாட ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் பணத்தை தர மறுத்த ஹரிஹரன், இது தொடர்பாக அந்த இளைஞரின் தந்தைகளிடமும் புகார் அளித்துள்ளார். ஆத்திரமடைந்த மூவரும் ஹரிஹரனைப் பழிவாங்க சரியான நேரத்தைத் தேடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஹரிஹரன் கடந்த 18ம் தேதி இரவு 11 மணியளவில் அனகாபுத்தூர் பக்தவச்சலம் நகர் பிரதான சாலையில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த லோகேஷ்,


சந்தோஷ் மற்றும் 17 வயது வாலிபர் ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் , மறைத்து வைத்திருந்த கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஹரிஹரனை தாக்கினர். ஹரிஹரனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹரிஹரனை மீட்டு,

சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிஹரனை தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவரை அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், கடந்த ஆயுதபூஜைக்கு பணம் கேட்டதால் தந்தையிடம் கூறி விட்டதால் அவரை பழிவாங்க இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய லோகேஷ் மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற இளைஞர்களின் மாமூல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, தெருநாய் மீது கல்லெறிவதைக் கேட்ட கும்பல் ஒரு குடும்பத்தை கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.