மாமனார் தலையில் அம்மிக் கல்லை போட்ட மருமகன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

268

திருவண்ணாமலை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர்கள் ஜமால்பாஷா – சைதானிபி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் மனிஷாவைத் தனது உறவினரான மன்சூருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் மன்சூர்-மனிஷா தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு வந்தனர்.

இதனால் மனிஷா அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று, மீண்டும் ஓரிரு நாளில் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை மன்சூர் மனீஷா தம்பதியினருக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. அதனால் கோபமடைந்த மனீஷா தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆத்திரம் தலைக்கேறிய மன்சூர், கடும் கோபத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.


அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் தனது மாமானார்தான் எனக் கூறியபடி வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மாமனார் ஜமால்பாஷாவின் தலைமீது அம்மிக் கல்லை போட்டதாக சொல்லப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜமால் பாஷா உயிரிழந்தார்.

அதையடுத்து மன்சூர் ஆரணி டவுன் போலீசாரிடம் சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் அம்மி கல்லை போட்டு மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.