தீய சக்திகளை விரட்டுறேன் : 10 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்துடன் எஸ்கேப் ஆன இளம்பெண்!!

24

வீட்டில் இருந்து தீய சக்திகளை விரட்டுவதாக கூறி ரம்யா என்ற இளம்பெண், சூனியம் செய்து 5 பேரிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை ஏமாற்றிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்யாவிடம் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்து பாதிக்கப்பட்ட சாந்தா, நானி, லீலா, ஓமனா, பாபு உள்ளிட்டோர் பள்ளிக்கல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

அதில், ரம்யா தன்னை மாந்திரீகம் தெரிந்தவர் என்றும், தங்கள் வீடுகளை அச்சுறுத்தும் தீய சக்திகளை விரட்டுவதாகவும் உறுதியளித்திருந்தார்.

சாந்தாவின் வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று கூறி ரம்யா தனது மோசடி நாடகத்தைத் தொடங்கி இருக்கிறார்.

தன்னை ஒரு தேர்ந்த மாந்திரீகவாதி போல் காட்டி, அவர்களது வீடுகள் தீய ஆவிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்களை ஏமாற்றி இருக்கிறார்.

தீய ஆவிகளிடம் இருந்து ரம்யா அவர்களைப் பாதுகாக்க போலியான சூனியம் செய்து, அதற்கு பணம் தரக் கோரி இருக்கிறார். மாந்திரீகத்திற்கு போதிய பணம் இல்லாதவர்கள், தங்கள் கால்நடைகளை விற்று பணம் திரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து பணத்தை ரம்யா பெற்றுக் கொண்டார்.


இதற்கிடையில் ரம்யா, ஓமனாவிடம் இருந்து மூன்றரை சவரன் தங்க நகைகளையும், மற்றவர்களிடம் நகைகளையும் (மோதிரங்கள் மற்றும் வளையல்கள்) ஒரு வாரமாக தனக்குப் பிணையாகத் தேவை எனக் கூறி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் ரம்யா, ஐந்து பேரையும் தமிழகத்தில் உள்ள அத்தின்கரை தேவாலயத்திற்கு சடங்குக்காக செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், சடங்கு நடைபெறாததால், ஐந்து பேர் கொண்ட குழுவினர் வீடு திரும்பினர்.

வீட்டிற்கு திரும்ப வந்ததும் அவர்கள் ரம்யாவைத் தொடர்பு கொள்ள முயன்ற போது, செல்போனில் ரம்யாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர், கிளிமானூர் அருகே உள்ள நகைக்கடையில் ஓமனாவின் தங்கச் சங்கிலி விற்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் ரம்யாவை கண்டுபிடிக்க கோரி புகார் தெரிவித்திருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.