புதுமணப்பெண் தற்கொலை வழக்கு… பயத்தில் மாமியார் தற்கொலை முயற்சி!!

7

கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் கார்த்திக்கிற்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாபு மகள் ஸ்ருதி பாபுவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி பாபு தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ருதிபாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து, கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவள்ளி, ஸ்ருதிபாபு ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், மாமியார் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ருதி பாபு தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.  இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தனது மாமியார் கணவருடன் சேர விடாமல் தடுத்து வருவதாக மனவேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் செண்பகவள்ளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.


அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சை பெற்று வருகிறார். சுசீந்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.