17 வயதில் பெரும் சோகம் : தேசிய பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது 270 கி எடை கழுத்தில் விழுந்து மரணம்!!

10

17 வயசு தான். இந்த வயதில் நிகழ்ந்த மரணத்தை அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாமல் கதறுகிறார்கள் விளையாட்டு வீராங்கனைகள்.

17 வயதில், தேசிய பளு தூக்கும் வீராங்கனை, பயிற்சியின் போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையுமே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17). தேசிய அளவில் பல்வேறு பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று யாஷ்டிகா வழக்கம் போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடன் அவரது பயிற்சியாளரும் உடன் இருந்தார். யாஷ்டிகா சுமார் 270 கிலோ எடையைத் தூக்க பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ​​எதிர்பாராத விதமாக, எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது. யாஷ்டிகாவைக் காப்பாற்ற முயன்றதில் பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொன்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் வீராங்கனை யாஷ்டிகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.


இந்த சம்பவத்தில் வீராங்கனை யாஷ்டிகாவின் குடும்பத்தினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாஷ்டிகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.