கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே நெரலகட்டே கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயது லட்சுமணா. இவரது மனைவி 42 வயது ராதாம்மா.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக பணிபுரிந்து வந்தார்.
லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் லட்சுமணா சண்டை போட்டு வந்தார்.
அதுபோல், நேற்று முன்தினமும் குடிபோதையில் ராதாம்மாவுடன், லட்சுமணா தகராறு செய்தார். அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த அவர், ராதாம்மாவை அடித்து தாக்கியதுடன், அவரது தலையை சுவரில் முட்டியதாக தெரிகிறது.
இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த ராதாம்மா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தன்னுடைய மனைவி வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ராதாம்மாவின் இறுதிசடங்குக்கு ஏற்பாடுகளும் நடந்தது. இந்நிலையில் புறநகர் போலீசாருக்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு, லட்சுமணா தன்னுடைய மனைவி கொலை செய்து விட்டதாகவும்,
போலீசாருக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நெரலகட்டே கிராமத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். லட்சுமணாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதலில் தனது மனைவி கீழே தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மனைவியை சுவரில் தலையை முட்டி கொலை செய்ததை லட்சுமணா ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக இருந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டும், குடிபோதையிலும் லட்சுமணா அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் மூத்த மகன் உயிரிழந்த பின்பு ராதாம்மாவும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான லட்சுமணாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.