மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவர் எடுத்த விபரீத முடிவு!!

6

கோவை மாவட்டம் சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (45). இவரது மனைவி சங்கீதா (42). கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சங்கீதா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கிருஷ்ணகுமார் மலேசியாவில் வேலைப் பார்த்து வந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு திரும்பி இங்கு மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு 2 மகள்கள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே கடந்த 2 வருடங்களாக குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவி சங்கீதாவின் நடத்தையில் கிருஷ்ணகுமார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 6 மாதங்களாக மனைவி சங்கீதா பட்டணம் புதூரிலும், கணவர் கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் உள்ள தோட்டத்திலும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மார்ச் 3ம் தேதி திங்கள்கிழமை காலை சுமார் 7.40 மணியளவில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் வடக்கஞ்சேரியில் இருந்து பட்டணம் புதூருக்கு வந்த கிருஷ்ணகுமாருக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.


இதில் கோபமடைந்த கிருஷ்ணகுமார் துப்பாக்கியை எடுத்து சங்கீதாவின் மார்பு பகுதியில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் வீட்டிலிருந்த ஒரு போர்வையை எடுத்து சங்கீதாவின் மீது போர்த்தி வைத்து விட்டு வீட்டை சாத்திவிட்டு பட்டணம் புதூரிலிருந்து வடக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணகுமார், அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டணம் புதூரில் வீட்டின் அருகே உள்ளவர்கள் துப்பாக்கிச் சப்தம் கேட்டு வீட்டுக்கு சென்றுப் பார்த்த போது சங்கீதா உயிரிழந்த நிலையில் கீழே ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உள்ளிட்டோர் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் செல்போனுக்கு காவல்துறையினர் தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பேசிய கேரள போலீசார், கிருஷ்ணகுமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கேரள போலீசார் கிருஷ்ணகுமார் உடலையும் அங்கிருந்த துப்பாக்கியும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.