தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பரும்பு மாடி தெருவில் வசித்து வந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தில் வசித்து வரும் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த 2 வாரங்களாக தங்கி இருந்தார்.
இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
உடனே அவரை மகாலட்சுமி உட்பட மற்ற திருநங்கைகள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சைலு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த சைலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, சைலு பெண்ணாக மாறுவதற்காக தனது மர்ம உறுப்பை தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும், அப்போது இறந்து விட்டதாகவும் மற்ற திருநங்கைகள் தெரிவித்தனர்.
எனினும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரது மர்ம உறுப்பை மகாலட்சுமியும்,
மற்றொரு திருநங்கையான மதுமிதாவும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உட்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான 2 திருநங்கைகளும் ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்ததாக போலீசார் விசாரணையில் பகீர் தகவல் வெளியானது.