பல பெண்களில் வாழ்வில் விளையாடிய காசி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

300

தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசி வழக்கில் சிபிசிஐடி பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கோழிக்கடை நடத்தி வரும் நாகர்கோவிலை சேர்ந்த காசி சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

பல பெண்களுடன் நட்பாக பழகிய காசி, அவ்வப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு பெண்களை மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்தும், பணம் பறித்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காசியின் லீலைகள் அம்பலமாகின.

அதன்பேரில் காசி மீது கோட்டார், நேசமணிநகர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


இந்நிலையில் டிராவிட் என்பவர் வடசேரி பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், காசியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதிக வட்டி கேட்டு அவர் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார், மேலும் தன்னிடமிருந்து விலையுயர்ந்த வாகனத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இப்படியான பல புகார்கள் குவிந்த நிலையில் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, அவர்கள் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து காசி மீது போடப்பட்டு உள்ள கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.

இதற்காக வடசேரி பொலிசார், வங்கி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளை காசி பெயருக்கு மாற்ற உதவி புரிந்த புரோக்கர் நாராயணன் மற்றும் காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் கந்து வட்டி வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 1,250 பக்கங்கள் கொண்ட அந்த குற்ற பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் தாக்கல் செய்தனர்.