ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம் : 2 காதலிகளுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு துடிதுடிக்க கொன்ற கல்லூரி மாணவன்!!

8

சேலம் ஏற்பாடு மலைப்பாதையில் ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, துடிதுடிக்க ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு காதலன் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டா காதலால் நேரிட்ட இந்த விபரீதத்தில் தனது இரண்டு காதலிகளுடன் சேர்ந்துக் கொண்டு ஆசிரியைக்கு விஷ ஊசிப் போட்டு துடிதுடிக்க கொலைச் செய்து விட்டு, ஆசிரியையின் சடலத்தை ஏற்காடு மலைப்பாதையில் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை அவரது 2 காதலிகளுடன் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அந்தப் பெண்ணைக் காணவில்லை என்றும், அவரது செல்போன் எண் தொடர்ந்து சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாகவும், இளம்பெண் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருப்பதாகவும் விடுதி வார்டன்,

பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.


போலீசாரின் விசாரணையில், மாயமான இளம்பெண் செல்போனுக்கு கடைசியாக திருச்சியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்தது பதிவாகியிருந்தது.

மேலும் அப்பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதை வரை சென்ற நிலையில், அதன் பின்னர் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணுடன் பேசிய திருச்சி வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் மாயமான இளம்பெண்ணை கொலை செய்து விட்டு, ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் அவரது சடலத்தை தூக்கி வீசியதாக இளைஞர் தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளப்பட்டி மற்றும் ஏற்காடு போலீசார், வாலிபர் குறிப்பிட்ட 20 அடி பள்ளத்தில் தேடுதல் வேட்டை நடத்தி, அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட இளம்பெண், திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த முதுகலை பட்டதாரியான லோகநாயகி (எ) அல்பியா (31) என்பதும்,

இவருக்கும் பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரைச் சேர்ந்த பி.இ நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் (22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கடந்த 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்காக லோகநாயகி மதம் மாறி அல்பியா என தனது பெயரையும் மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்.

அல்பியா கடந்த 2023ம் ஆண்டு சேலம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

அவரது காதலன் அப்துல் ஹபீஸ் அவ்வப்போது விடுமுறை நாட்களில் சேலம் வந்து அல்பியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே அப்துல் ஹபீஸ் சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா (22) என்பவருடன் பழகியுள்ளார்.

இதை அறிந்த அல்பியா, காதலன் அப்துல் ஹபீஸிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தன்னைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால், உன்னையும், உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என அல்பியா அப்துல் ஹபீஸிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஹபீஸ் தனது புது காதலி காவியா சுல்தானாவிடம், அல்பியா குறித்து கூறி ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பின் அல்பியாவைக் கொலை செய்ய புது காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அல்பியாவுக்கு முன்னர் அப்துல் ஹபீஸுக்கு மோனிஷா என்கிற காதலியும் இருந்துள்ளார். எனவே இந்த திட்டத்திற்கு உடந்தையாக இருக்க தனது முதல் காதலியான மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவிடம் (22) அப்துல் ஹபீஸ் பேசி உதவும் படிக் கேட்டுள்ளார்.

மோனிஷாவிடம் தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்து விட்டார்.

எனவே அல்பியாவை பழி வாங்க வேண்டும். அவரை கொலைச் செய்ய நீ உதவி செய்ய வேண்டும் என ஒரு கட்டுக்கதையை கூறி மோனிஷாவை மூளை சலவைச் செய்து சம்மதிக்க வைத்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் 1ம் தேதி அப்துல்ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து வாடகைக்கு டிரைவர் இல்லாமல் காரை மட்டும் எடுத்துக் கொண்டு, அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று, விடுதியில் இருந்த அல்பியாவை வெளியே வரவழைத்துள்ளனர்.

அதன் பின்னர் தனது காதலிகள் 2 பேரையும் அல்பியாவிடம் தனது தோழிகள் என்று அறிமுகப்படுத்தி வைத்த அப்துல், பின்னர் அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு நாம் அனைவரும் ஏற்காடு செல்வோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே சென்றவுடன் காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். அப்போது மோனிஷா அல்பியா உடலில் விஷ ஊசியை இருமுறை செலுத்தியுள்ளார். இதில் அல்பியா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர் அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து மூவரும் அதே காரில் தப்பி சென்றுள்ளனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தனது இரு காதலிகளுடன் சேர்ந்து கல்லூரி மாணவர், ஆசிரியையைக் கொலைச் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.