மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர வர்மா. இவரது மகன் பிரமோத் வர்மாவுக்கு 2009ல் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்குள் கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் சமாதானம் அடைந்தததால் இவ்வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இருந்த போதிலும் கணவன் – மனைவிக்குள் பிரச்சனை குறையவில்லை.
தேவாஸ் என்ற நகரில் இருந்து இந்தூருக்கு குடிபெயரும்படி பிரமோத் வர்மாவின் மனைவி வற்புறுத்தி உள்ளார். ஆனால் பிரமோத் வர்மா இடம்பெயர சம்மதம் தெரிவிக்கவில்லை.
இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, மிருதுல் விஹாரில் ஒரு வீட்டை புதியதாக விலைக்கு வாங்கி, அங்கு தனது மகனையும், மருமகளையும் சுரேந்திர வர்மா குடியமர்த்தினார்.
ஆனால் அவர்களுக்குள் அங்கும் ஒத்துப் போகவில்லை. தம்பதிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே வாழ்ந்து வந்தனர்.
ஒருகட்டத்தில் மன நிம்மதியிழந்த பிரமோத் வர்மா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக நேற்று முன்தினம் இரவு பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி வந்து, அதனை குடித்துவிட்டதாக தெரிகிறது.
மயக்க நிலையில் வாயில் நுரை ததும்பிய நிலையில் இருந்த அவரை பார்த்து, அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்கொலைக்கு முயன்ற பிரமோத் வர்மாவின் செல்போனை மீட்டு அதனை பரிசோதனை நடத்தினோம்.
அந்த செல்போனில் நான்கு பக்க தற்கொலைக் குறிப்பு கடிதம் உள்ளது. தான் எழுதிய கடிதத்தை போட்டோ எடுத்து செல்போனில் வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘என்னை மன்னித்துவிடுங்கள் தந்தையே… நல்ல மகனாகவோ, நல்ல சகோதரனாகவோ, நல்ல தந்தையாகவோ என்னால் மாற முடியவில்லை.
இளைஞர்களே ஒருபோதும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்; அது அவசியமில்லை. என் வாழ்க்கையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
எனது மரணத்திற்கு என் மனைவி, மாமியார், 2 மைத்துனர்கள் தான் காரணம். அவர்கள் என்னை மனரீதியாக நிறைய துன்புறுத்தினர். என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்ற அதிகம் போராட வேண்டியிருந்தது.
என் தந்தை ஒரு நேர்மையான எம்.எல்.ஏவாக இருந்தார் எனக் கூறியுள்ளார். மேலும் எனது தந்தை ஒருபோதும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தவில்லை. எங்களது குடும்பம் கண்ணியத்துடன் வாழ்ந்துள்ளது.
பெண்களை காப்பாற்றுவதிலும், அவர்களுக்கு கல்வி கொடுப்பதிலும் மட்டுமே அரசுகள் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். இதன் காரணமாக, பல குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன’ என எழுதியுள்ளார்.
இது குறித்து போலீசார் பிரமோத்தின் செல்போனில் இருக்கும் திருமணம் தொடர்பான ஆவணங்கள், பழைய வழக்குகளின் கோப்புகள், எப்ஐஆர் நகல்களை மீட்டு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.